Thursday, November 25, 2010

கவிஞனை நினைக்கக் கவலையாக இருக்கிறது.

பரணிபாடிய
தமிழ் கவிஞன்தான்
இப்போது
பரண்மீதேறி குறட்டை விடுகிறான்.

ஓடிவந்த காவேரி
ஆற்றைப் பாடியவனே
நடிகை காவேரியை பாட்டால்
வியக்கிறான்

சுட்டும் விழிச்சூரியனை கட்டிப்போடக்
கோலெடுத்தவனே
கட்டும் சேலை மடிப்பிலே
கசங்கிப் போனான்.

சேரன் சபையிலே
கவிச்சரன் கட்டியவனே
விஐயன் சபையிலே பாவாடை நாடா
கட்டுகிறான்

யுகப்புரட்சிபற்றி
பாட்டெழுதக் கிளம்பியவனே
சினிமா
தாரகைகளின்
தசைத் திரட்சிபற்றிப் பாட்டெழுதிக்
கிழிக்கிறான்.

-மட்டுவில் ஞானக்குமாரன்

Sunday, November 21, 2010

காதல் கலையும் காலம் ....!

இரவுகளைச்
சபித்தபடியும்
தனிமையினைச் சுவைத்தபடியும்
கரைகிறது வாழ்க்கை...

சேமிக்கச் சிரமமாக இருக்கிறது
உனது அன்பை
மாதச்சம்பளத்தை வைத்து
தடுமாறும்
சிற்றூழியன் போல
வாழ்க்கையோ
விரயமாகிக்கொண்டிருக்கிறது

கையிலே அகப்பட்ட
பனிக்கட்டி போல
உன்னால்
கத்தரிக்ப்பட்ட
இதயக் கனி
வாசத்திற்காகவே வரவேற்கப்பட்ட
கறிவேப்பிலை போல
ஒரு ஓரத்திலே காய்ந்து கிடக்கிறது...!.

கண்ணாடி வீட்டின் மேலே
விட்டெறிந்த கல் போலானது
என் உயிர்க் கூட்டின்
ஆணி வேரினைக்
காயப்படுத்திய உனது சொல்.

கிழிந்தது சட்டையா
சொல்
இதயம் அல்லவா
எப்படித் தைப்பது...?

-மட்டுவில் ஞானக்குமாரன்