இரவுகளைச்
சபித்தபடியும்
தனிமையினைச் சுவைத்தபடியும்
கரைகிறது வாழ்க்கை...
சேமிக்கச் சிரமமாக இருக்கிறது
உனது அன்பை
மாதச்சம்பளத்தை வைத்து
தடுமாறும்
சிற்றூழியன் போல
வாழ்க்கையோ
விரயமாகிக்கொண்டிருக்கிறது
கையிலே அகப்பட்ட
பனிக்கட்டி போல
உன்னால்
கத்தரிக்ப்பட்ட
இதயக் கனி
வாசத்திற்காகவே வரவேற்கப்பட்ட
கறிவேப்பிலை போல
ஒரு ஓரத்திலே காய்ந்து கிடக்கிறது...!.
கண்ணாடி வீட்டின் மேலே
விட்டெறிந்த கல் போலானது
என் உயிர்க் கூட்டின்
ஆணி வேரினைக்
காயப்படுத்திய உனது சொல்.
கிழிந்தது சட்டையா
சொல்
இதயம் அல்லவா
எப்படித் தைப்பது...?
-மட்டுவில் ஞானக்குமாரன்
No comments:
Post a Comment