Saturday, December 4, 2010

காயம்…!

மிச்சமாய் இருக்கும்
ஒற்றைக் கால் கூட
அதிஸ்டம் என்றான நிலை
ஏன்எனில்
இரண்டு கால்களும்
பலருக்கு இங்கே தறிக்கப்பட்டே
இருக்கிறது….

பிச்சைக்காரனின் துணிபோல
முகம் எங்கிலும்
ஒட்டுக்காயங்கள்.

முகங்கள்
தறிக்கப்பட்டவருக்கு முன்னால்
அதுகூட அதிஸ்டமாகிறது…!.

உலக வரைபடம் போல
உடலெங்கும் தையல்கள்.
இதை
விகாரமாக யாரும் நினைப்பதேயில்லை
அனைவருக்கும் பொதுவான
அடையாளம் என்பதால்

மாடுகளுக்கு குறிசுடுவதைப்போல
உடலெங்கம்
சன்னம் கிழித்த கோடுகள்.

அங்கவீனர்களுக்காக
மட்டும் தான் இட ஒதுக்கீடு எனில்
இங்கே
அனைவருக்கும்
இடம் ஒதுக்கியே ஆகவேண்டும்….!

--கவிதை மட்டுவில் ஞானக்குமாரன்

Thursday, November 25, 2010

கவிஞனை நினைக்கக் கவலையாக இருக்கிறது.

பரணிபாடிய
தமிழ் கவிஞன்தான்
இப்போது
பரண்மீதேறி குறட்டை விடுகிறான்.

ஓடிவந்த காவேரி
ஆற்றைப் பாடியவனே
நடிகை காவேரியை பாட்டால்
வியக்கிறான்

சுட்டும் விழிச்சூரியனை கட்டிப்போடக்
கோலெடுத்தவனே
கட்டும் சேலை மடிப்பிலே
கசங்கிப் போனான்.

சேரன் சபையிலே
கவிச்சரன் கட்டியவனே
விஐயன் சபையிலே பாவாடை நாடா
கட்டுகிறான்

யுகப்புரட்சிபற்றி
பாட்டெழுதக் கிளம்பியவனே
சினிமா
தாரகைகளின்
தசைத் திரட்சிபற்றிப் பாட்டெழுதிக்
கிழிக்கிறான்.

-மட்டுவில் ஞானக்குமாரன்

Sunday, November 21, 2010

காதல் கலையும் காலம் ....!

இரவுகளைச்
சபித்தபடியும்
தனிமையினைச் சுவைத்தபடியும்
கரைகிறது வாழ்க்கை...

சேமிக்கச் சிரமமாக இருக்கிறது
உனது அன்பை
மாதச்சம்பளத்தை வைத்து
தடுமாறும்
சிற்றூழியன் போல
வாழ்க்கையோ
விரயமாகிக்கொண்டிருக்கிறது

கையிலே அகப்பட்ட
பனிக்கட்டி போல
உன்னால்
கத்தரிக்ப்பட்ட
இதயக் கனி
வாசத்திற்காகவே வரவேற்கப்பட்ட
கறிவேப்பிலை போல
ஒரு ஓரத்திலே காய்ந்து கிடக்கிறது...!.

கண்ணாடி வீட்டின் மேலே
விட்டெறிந்த கல் போலானது
என் உயிர்க் கூட்டின்
ஆணி வேரினைக்
காயப்படுத்திய உனது சொல்.

கிழிந்தது சட்டையா
சொல்
இதயம் அல்லவா
எப்படித் தைப்பது...?

-மட்டுவில் ஞானக்குமாரன்

Sunday, October 31, 2010

சங்கத் தமிழன்.

அவநம்பிக்கைகளின் தேசத்திலே
விரக்தி மீன்பிடிக்கும்
தோழனே ....!

உனக்கும்
எனக்கம் ஜாதிக்கற்களைக் கொண்டா
சீனச்சுவர் கட்டுவது ...?

செந்தமிழ்ப்பாட்டுக்கு
ஜதி பார்க்கலாம்
ஜாதி பார்க்கலாமா ...?

நாம் தமிழர்
நமக்குத் தாய் தமிழ்
பிறகெதற்கு
இந்த கலோ என்ற ஆங்கில ஆயா ....?

முள்மாலையால் முகமூடி போட்டபடி
தமிழனைப்பிரிக்கின்ற கருக்கு மட்டைக்கட்சிகளுக்கா
உன் உதடு
முத்தம் கொடுக்கப்போகிறது.

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தவனே
இப்போது சங்கம்
வைத்துச் சாதி வளர்க்கிறாயே.....!

கவிதை மட்டுவில் ஞானக்கமாரன் 12.10.2010

Friday, October 29, 2010

திருமண வாழ்த்து

இருமனம் இணையும் திருமணநாளிலே
பறக்கும்
கிளிகள் வசந்த வானிலே ....

மங்கையின் நெத்தியில்
மாதவன் குங்குமம்
சங்குக் கழுத்திலே தாலியே
சங்கமம்.

பதினாறும் பெற்றதால்
இனி
ஆல் போல் தழைக்கும் இவள் சந்ததி
பாருக்குள்ளே
இவர் போல் உண்டோ
வேறொரு அதிதி....

மஞ்சள் முகத்தாளிற்கு
கொஞ்சல்
கெஞ்சலாய் பொழுதுகள்
கழியும்.

அறுகுபோல் தழைக்கவும்
ஆறுபோல் சுரக்கவும்
வளர்க நீவீர் வாழ்க நூறாண்டு....!

இருவரிக்குறளென
இருவரும்
இணைகையில்

செம்பொன்
சிவந்த கன்னம்
அம்மன் அருளால்
அருள் தரும் திண்ணம்

குலப்பெருமை காக்கும் பெண்ணே
பிரபாஜினி
இனி நீ
கிருஸ்ணனுக்கு தாசனாவாய்
அந்தத் தாசன் உனக்கு
ஆசனாவான்.

இணைந்து வாழ்வீர்
உமை மகேசுவரனாக
என்றும்
வையகம் போற்றும் வரனாக.....

கவிதை மட்டுவில் ஞானக்குமாரன் (29.10.2010)

எனது கவிதைகளின் தீவிர வாசகனான கிருஸ்ணதாசன் பிரபாஜினி திருமணத்துக்காக எழுதிய வாழ்த்துக்கவிதை.

Monday, October 11, 2010

பெய்யெனப் பெய்யா மழை .....!

அம்மனுக்கு கூறை
யன்னலுக்குத் திரைச்சீலை
இரசிக்கிறேன்
கோவணம் இல்லாத என்குறையை
அவைகள் தீர்ப்பதனால்.

பொன்னி அரிசி
மொட்டைக்கறுப்பன் நெல்
ஒரு மாத விளைச்சல் தான்
ஆனால்
நிலமில்லை எங்கே விதைப்பது ...?

குளிர் நிலா
சில்லிடும் மழைத்தூறல்
கண்களைச் சுரண்டும் தூக்கம்
எனக்கோ வீடில்லை
எங்கே போய் தூங்கலாம் .....

சூரிய அடுப்பு
மின்சாரத்திலே சோறாக்கும் சட்டி
விஞ்ஞானமே நன்றி
ஆனால்
சோறு ஆக்க அரிசியில்லையே

கொடுநாகத்தை
நல்லபாம்பு என்பது போல இருக்கிறது
நீ ஏந்திய
சனநாயகம் எனும் சொல்.
இரத்தம் இல்லை
யுத்தம் இல்லை
தளபதிப்பட்டம் எதற்காக
நாடாளுமன்றிலே செய்த கதிரைப் போருக்காகவா.

நைக் சப்பாத்து
அக்கு பஞ்சர் செருப்பு
எல்லாம் இருக்கிறது வீட்டிலே புதிதாக
கால்கள்தான் கண்ணிவெடியிலே
துண்டாயிற்று....

போரை எதிர்கும் யாப்பு
அணுதடுப்பு ஒப்பம்
பிறகெதற்கு பீரங்கி தொழிற்சாலை

நேர்த்திக்கடன்
கோடிகள் கேட்டு
சாமிக்கான காணிக்கை மட்டும்
வெட்ட வெட்ட வளரும்
முடிதானா ...?

மட்டுவில் ஞானக்குமாரன்

பன்னீர்பூக்களுக்குப் பதிலாக கண்ணீர்ப்பாக்களை அனுப்புகிறோம்..!

மூச்சுப்பிதுங்கி
முழி வெளியே வழிகிறபோது
பொதிகைத் தமிழின்
எதுகை மோனைகளை
எப்படி சுவைத்திட முடியும்?!

தீர்க்க வரவில்லையே யாரும்
என்றபோது
நெஞ்சு முழுவதும்
ஏதோ ஒரு பாரம்...

எந்தப் பனைக்காட்டிலும்
எங்கள் பிணக்காட்டிலும் கூட
தமிழ் வாழும்
தமிழன் நிலை தான்
சொல்லச் சிரமமாக இருக்கிறது.

பேச 'மைக்'கும்
காசு கைக்கும் கிடைக்குமெனில்
எந்தத்தம்பியும் கோவை வருவான்
சேவை செய்ய...

நல்லது
செம்மொழிக்கு மாநாடு நல்லதுதான்
வழிமொழிவதற்குத் தான்
வாய்களற்றவரானோம்.

வந்தாரை வாழவைத்தவன்
அகதிமுகாம்
வாசலிலே
இருந்தும் மலர்க்கொத்து அனுப்பிட
விருப்பம் ஆனால்
பூக்களுக்குப் பதிலாக
மண்டை ஓடுகளே
இங்கே காய்த்துத் தொங்குகின்றன.

--மட்டுவில் ஞானக்குமாரன்

Monday, August 9, 2010