Monday, October 11, 2010

பெய்யெனப் பெய்யா மழை .....!

அம்மனுக்கு கூறை
யன்னலுக்குத் திரைச்சீலை
இரசிக்கிறேன்
கோவணம் இல்லாத என்குறையை
அவைகள் தீர்ப்பதனால்.

பொன்னி அரிசி
மொட்டைக்கறுப்பன் நெல்
ஒரு மாத விளைச்சல் தான்
ஆனால்
நிலமில்லை எங்கே விதைப்பது ...?

குளிர் நிலா
சில்லிடும் மழைத்தூறல்
கண்களைச் சுரண்டும் தூக்கம்
எனக்கோ வீடில்லை
எங்கே போய் தூங்கலாம் .....

சூரிய அடுப்பு
மின்சாரத்திலே சோறாக்கும் சட்டி
விஞ்ஞானமே நன்றி
ஆனால்
சோறு ஆக்க அரிசியில்லையே

கொடுநாகத்தை
நல்லபாம்பு என்பது போல இருக்கிறது
நீ ஏந்திய
சனநாயகம் எனும் சொல்.
இரத்தம் இல்லை
யுத்தம் இல்லை
தளபதிப்பட்டம் எதற்காக
நாடாளுமன்றிலே செய்த கதிரைப் போருக்காகவா.

நைக் சப்பாத்து
அக்கு பஞ்சர் செருப்பு
எல்லாம் இருக்கிறது வீட்டிலே புதிதாக
கால்கள்தான் கண்ணிவெடியிலே
துண்டாயிற்று....

போரை எதிர்கும் யாப்பு
அணுதடுப்பு ஒப்பம்
பிறகெதற்கு பீரங்கி தொழிற்சாலை

நேர்த்திக்கடன்
கோடிகள் கேட்டு
சாமிக்கான காணிக்கை மட்டும்
வெட்ட வெட்ட வளரும்
முடிதானா ...?

மட்டுவில் ஞானக்குமாரன்

No comments:

Post a Comment